10 கோடி ரூபாய் வரை கடன் வேண்டுமா .. வெறும் 59 நிமிடத்தில்...அப்ளை செய்வது ரொம்ப ஈஸி..!
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டுப் மத்திய அரசு நாட்டின் தொழிற்துறை மற்றும் வர்த்தகச் சந்தையை மேம்படுத்த பொதுத்துறை வங்கிகளின் வாயிலாகக் கடன் அளிக்க ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கியது. 1 லட்சம் ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் வெறும் 59 நிமிடத்தில் விண்ணப்பித்து, முதற்கட்ட ஒப்புதலைப் பெறலாம். நிதி பிரச்சனையால் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியாத MSME நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும்.
பிஎஸ்பி லோன் பின்டெக் திட்டம்:
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) PSB லோன்ஸ் என்ற சிறப்புப் பின்டெக் தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் கடன் கொடுக்கும் திட்டத்தையம் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு SIDBI நாட்டின் 5 பொதுத்துறை வங்கிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதில் சில ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, விஜயா வங்கி, இந்தியன் வங்கி ஆகியவை இத்திட்டத்தில் இணைந்துள்ளது.
கடனும், கடனுக்கான அளவீடும்:
இந்தச் சிறப்புத் திட்டமானது வர்த்தகக் கடன், தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகன கடன் மற்றும் முத்ரா கடன் ஆகியவை கொடுக்கப்படுகிறது. இந்த 59 நிமிட கடன் சேவையில் ஒவ்வொரு கடனுக்கும் அதிகப்படியான கடன் அளவீடு உள்ளது. அதிகப்படியான கடன் இந்த அளவீட்டைப் பொருத்து தான் கொடுக்கப்படுகிறது. அதில் சில
வர்த்தகக் கடன் - 5 கோடி ரூபாய்
தனிநபர் கடன் - 20 லட்சம் ரூபாய்
வீட்டுக் கடன் - 10 கோடி ரூபாய்
வாகன கடன் - 1 கோடி ரூபாய்
முத்ரா கடன் - 10 லட்சம் ரூபாய்
கடனை விண்ணப்பிக்கும் நடைமுறைகள்:
இதில் எப்படி 59 நிமித்ததில் கடனுக்கு அப்ளை செய்வது என்பதை வாருங்கள் பார்ப்போம்.
படி 1: முதலில் பின்டெக் தளமான SIDBI உருவாக்கிய PSB லோன்ஸ் தளத்திற்குச் செல்லுங்கள்.
படி 2: அதில் உங்கள் பெயர், ஈமெயில் ஐடி, மொபைல் எண், ஓடிபி நம்பர் ஆகியவற்றைப் பதிவிட்டுக் கணக்கை துவங்கவும்.
படி 3: பிறகு அடிப்படையான கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.
படி 4: தற்போது ஜிஎஸ்டி அடையாள எண்ணை பதிவு செய்யுங்கள்.
படி 5: XML வடிவில் உங்கள் இன்கம் டாக்ஸ் ரிட்டன்ஸ் அறிக்கையை அடுத்த திரையில் பதிவேற்றம் செய்யுங்கள். அல்லது பான் மற்றும் நிறுவனம் துவக்கப்பட்ட நாள் ஆகியவற்றைக் கொண்டு உள்நுழையுங்கள்.
படி 6: கடந்த 6 மாதத்திற்கான கடன் வங்கிக் கணக்கு அறிக்கையைப் பதிவேற்றம் செய்யுங்கள்.
படி 7: அடுத்த திரையில், நிறுவனத்தின் தலைவர், உரிமை விபரங்கள் மற்றும் நிறுவனத்தின் முகவரி ஆகிய தகவல்களைப் பதிவிடுங்கள்.
படி 8: தற்போது கடனுக்கான காரணத்தையும் ஏற்கனவே வர்த்தகத்திற்காக நிறுவனத்தின் பெயரில் எடுக்கப்பட்ட கடன்கள் ஏதேனும் இருந்தால் பதிவு செய்யுங்கள்.
படி 9: படி8 வரை கொடுக்கப்பட்ட அனைத்து தரவுகளையும் முழுமையாகக் கொடுக்கப்பட்ட நிலையில், எந்த வங்கியில் நீங்கள் கடன் பெற விரும்புகிறீர்கள் என்பதைக் கேட்கும். ஒவ்வொரு வங்கிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் மாறும் என்பதால் உங்களது விருப்பமான வங்கியைத் தேர்வு செய்யுங்கள்.
படி 10: தற்போது இத்திட்டத்தின் கீழ் கடனை பெற வசதி கட்டணமாக 1000 ரூபாய் மற்றும் வரியைச் செலுத்த வேண்டும். இத்தொகையைச் செலுத்திய பின்பு தான் கடன் விண்ணப்பம் அடுத்தகட்டத்திற்குச் செல்லும்.
படி 11: பணத்தைச் செலுத்திய பின்பு 59 நிமிடத்தில் உங்கள் கடனுக்கான விண்ணப்பம் முதற்கட்ட ஒப்புதலை அடையும்.
வங்கியின் கடைசிக்கட்ட பணிகள்:
முதற்கட்ட ஒப்புதல் கடிதம் கிடைத்த பின்பு குறிப்பிட்ட வங்கிக்குச் சென்று அடுத்தகட்ட பணிகளைத் தொடர வேண்டும், வங்கிகள் கடனுக்கு ஒப்புதல் அளிக்க, நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் இதர ஆவணங்களை ஆய்வு செய்து பின்பு ஒப்புதல் அளிக்கும். வங்கிகளின் முடிவுகளைப் பொருத்து குறிப்பிட்ட கடன் அளவு மாறுபட அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.